புதுச்சேரி

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக்குழுவில் புதுவையை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் கல்லூரி வேலை வாய்ப்பில் புதுவைக்கு இடஒதுக்கீடு வழங்காதது ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்தும், ரேஷன்கடைகளை திறந்து பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தாதது, சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவு செய்யாதது, புதிய தொழிற்சாலைகளை அமைக்காதது, உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்தும் இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊர்வலத்துக்காக கடலூர் சாலை ரோடியர் மில் திடலில் காலை 9 மணி முதல் அ.தி.மு.க.வினர் திரள தொடங்கினர். புதுவையின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் வேன், பஸ் உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

தொடர்ந்து காலை 11.15 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ரோடியர் மில் திடலில் தொடங்கி, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை பின்புறத்தை அடைந்தது. அங்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.