புதுச்சேரி

போக்குவரத்து சிக்னல்களை எனக்காக நிறுத்த வேண்டாம்: போலீசாருக்கு உத்தரவிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி

மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலர் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது, போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு வி.ஐ.பிக்கள் சென்ற பின்பு சிக்கனல்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இதற்கிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்னலில் நிற்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பகல் நேரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வாகனம் சென்றபோது அவருக்காக போக்குவரத்து சிக்னல் நிறுத்தப்பட்டு அவரது வாகனம் சென்ற பின்பு சிக்னல் இயக்கப்பட்டது.

தனது வாகனத்தால் பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு திடீர் உத்தரவு பிறப்பித்தார்.

எனது வாகனம் செல்லும் போது சிக்னல்களை நிறுத்தி யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம். மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.

கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த உத்தரவை முன் உதாரணமாக கொண்டு அமைச்சர்கள், அதிகாரிகளும் சிக்னலில் காத்திருந்து செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.