புதுச்சேரி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-
கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.
கொள்முதல் மையங்கள் உணவு தானியங்களை விலைக்கு வாங்கும்பொழுது இழப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஒரு கவலைக்குரிய செய்தி ஆகும். துரதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மழைக் காலங்களில் ஆயிரக்கணக்கில் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் குவிக்கப் பட்டுள்ளன.
கொள்முதல் மையங்களில் குறைந்த செலவில் கொட்டகைகளை நிறுவுவதன் மூலம் இத்தகைய இழப்பை எளிதில் தவிர்க்கலாம். இதன் மூலம் அரசுக்கு அதிக நிதிச்சுமை இல்லாமல் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும்.
எனவே,கொள்முதல் மையங்களில் சேமிப்பு வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு மூலம் கிடங்குகளையும் குளிர்பதனக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.