புதுச்சேரி:
ஜிப்மரில் இந்தி திணிப்பு என பொய்யான தகவல் பரப்பிய தி.மு.க.- காங்கிரசுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜனதா கட்சியின் உழவர்கரை மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மூலக்குளம் ரீனா மஹாலில் நடைபெற்றது.
உழவர்கரை மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமி நாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், சிவசங்கரன், மாநில துணைத் தலைவர் மற்றும் உழவர்கரை மாவட்ட பா.ஜனதா பொறுப்பாளர் அருள் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ரஷ்யா-உக்ரைன் போரின் போது உக்ரைனில் தங்கி மருத்துவம் படித்த சுமார் 23 ஆயிரம் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாய் நாட்டுக்கு அழைத்து வந்தமைக்கும், பொட்ரோல் வரியை குறைத்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய கலால் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டை தெரிவிப்பது,
புதுவையில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும், ஆவாஸ் போஜனா பிரமதரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.75 லட்சமாக இருந்த மானியத் தொகையை ரூ.3.75 லட்சமாக உயர்த்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இந்தி திணிப்பு என்ற பொய்யான தகவலை மக்களிடையே பரப்பி அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசையும், காங்கிரசையும் வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயலாளர் லதா, பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், நீலகண்டன் மற்றும் உழவர்கரை மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் அனைத்து தொகுதி தலைவர்களும், மாநில நிர்வாகிகளும், அணி தலைவர்களும், பிரிவு அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.