புதுச்சேரி:
குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது. அதனால், நுரையீரல், இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை மூலம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் கீழ் உறக்கத்தின்போது, குறட்டை ஏற்படும் பிரச்சனையை கண்டறிய நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகம் மூலம் உறக்கத்தின்போது ஏற்படும் குறட்டை மற்றும் மற்ற குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை சிறப்பாக அளிக்க முடியும்.
மேலும், உறக்கத்தின்போது, ஏற்படும், மூச்சடைப்பு, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், நோயின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம். குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆய்வகத்தில் இலவசமாக சோதனை செய்து, காது, மூக்கு, தொண்டை, மருத்துவரை அணுகலாம்.