புதுவையை அடுத்த வில்லியனூர் உருவையாறு செல்வா நகரைச் சேர்ந்தவர் முருகன் (எ) பட்டா முருகன் (24).
இவர், மங்கலம் காவல் நிலையத்தின் ரவுடிகள் பட்டியலில் உள்ளார். இவர் மீது கொலை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறைறயில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2022ம் ஆண்டு புதுவையை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நட்பாகப் பழகி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி கர்ப்பமான நிலையில், முருகன் தலைமறைவானார்.
சிறுமியின் பெற்றோர் 2022ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி மங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுவை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி முன் நடைபெற்று வந்தது.
வழக்கில் விசாரணை முடிந்து, குற்றம் நிரூபணமான நிலையில், முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுவை அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார்.