புதுச்சேரி

ஓட்டல் அறையில் ரகசிய கேமரா- காதல் ஜோடி அலறியடித்து ஓட்டம்

இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில், மூலக்குளத்தை சேர்ந்த வாலிபர், தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.

அப்போது தங்கியிருந்த அறையில் எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்ஸில், இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக்பாயிண்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ரகசிய கேமராவை கழற்றி எடுத்த ஜோடி, உடனடியாக அறையை காலி செய்தது. இது குறித்து ரெசிடென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் கிடைக்காததால் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்.

அப்போது குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ஓட்டல் மேலாளர் தேங்காய்த்திட்டு வசந்த்நகரை சேர்ந்த ஆனந்த் (வயது25) மற்றும் ஓட்டல் ஊழியர் அரியாங்குப்பம் ஓடை வெளியை சேர்ந்த ரூம் பாய் ஆப்ரகாம் (22) ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (சி)பெண்களை ஆபாசமாக படம் பிடித்தல், தகவல் தொழில் நுட்ப பிரிவு 66 (இ) ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தல், கேபிள் மூலம் அனுப்புதல், தடயங்களை மறைத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் ஓட்டல் அறையில் தங்குபவர்களை ஆபாசமாக வீடியோ எடுக்க கேமரா மறைத்து வைத்துள்ளனரா அல்லது ரகசிய கேமரா காட்சிகளை நேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசித்து வந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.