புதுச்சேரி

ஆரோவில்லில் ரிக்சாவில் கூரை போட்டு பயணிக்கும் ரஷிய குடும்பம்

வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்கவாட்டில் தடுப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.பயணிப்பது ஏசி காரோ, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது.

புதுச்சேரி:

உலக மக்கள் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்ற மகான் ஸ்ரீ அரவிந்தரின் கனவை ஆரோவில் சர்வதேச நகரம் மூலம் நனவாக்கியவர் ஸ்ரீஅன்னை.

இங்கு பல வெளிநாட்டவர் ஆரோவில்வாசிகளாகவே மாறி அவர்களுக்கு தெரிந்த வேலைகளை செய்து வசித்து வருகின்றனர். அப்படி வசிக்கும் ரஷிய தம்பதிகள் செர்க்கே - தான்யா.

இவர்கள் பயணிப்பது ஏசி காரோ, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது. நமது பாரம்பரிய ரிக்சாதான். ஆரோவில் ஆட்டோமொபைல் பணிமனையில் வேலை செய்யும் செர்க்கே வடிவமைத்த கூரை போட்ட ரிக்சாவில் தான் குடும்பமே பயணிக்கிறது.

அவரது மனைவி தான்யா ஒரு ஓவியர். இவர்களுக்கு 3 குழந்தைகள். ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு ரிக்சாவில் தான் வந்து செல்கின்றனர்.

வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்கவாட்டில் தடுப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.

எத்தனை கி.மீ. தூரமாக இருந்தாலும் செர்க்கே தானே ரிக்சாவை மிதித்து ஓட்டி செல்கிறார். இந்த வாகனம் நகர பகுதியில் செல்லும் போது பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

SCROLL FOR NEXT