புதுவை மாநிலத்தில் 2021ல் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000ம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது.
இந்த உதவித்தொகை தேர்தல் நெருக்கத்தில் ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாத உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 13-ந்தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின் ஏற்கனவே உயர்த்திய குடும்ப தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ. 2 ஆயிரத்து 500 வழங்க நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ள 65 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் நேற்று முதல் இந்த தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்திருந்தார்.
இந்த தொகையையும் வழங்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.