புதுச்சேரி தேர்தலையொட்டி ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்பு மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் கவர்னர் அரசராக திகழ்ந்து டெல்லி ஆட்சியை அமலாக்குகிறார். புதுச்சேரியை இங்குள்ள மக்கள் ஆள அதிகாரம் வேண்டும். அதற்கு மாநில அந்தஸ்து தேவை. அதில் உறுதியாக இருக்கிறோம்.
மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை 6 மாதங்களில் நடத்துவோம். கருத்தியல் ரீதியிலான மோதல் வெறுப்பை பரப்பும் பாஜக, ஆர்எஸ்எஸ் தரப்புக்கும் அன்பு, ஒற்றுமைக்கான காங்கிரஸ் கூட்டணிக்கு இடையில் தேர்தல் நடக்கிறது.
தேர்தல் அறிக்கையை புதுச்சேரி வளர்ச்சிக்கு உகந்ததாக வடிவமைத்துள்ளோம். பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை, ரூ. 20 லட்சம் வரை மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளோம். அதிக மெஜார்ட்டியை புதுச்சேரியில் காங்கிரசுக்கு தாருங்கள்.
புதுச்சேரி மக்களே, உங்கள் வாக்குதான் உங்கள் சக்தி.
உங்கள் அரசை மீட்டெடுக்க வாக்கைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் குரலை ஒலிக்க செய்ய வாக்கை பயன்படுத்துங்கள்... தன் சொந்த மக்களால் ஆளப்படும் புதுச்சேரிக்காக வாக்களியுங்கள். காங்கிரசுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு ராகுல்காந்தி பதிவில் கூறியுள்ளார்.