புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விசிக - 1 என 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இவை அல்லாது திமுகவின் 5 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகளை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் பொதுகூட்ட மேடைக்கு அழைக்கப்படவில்லை.
ஆனால் இந்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் ராகுல் காந்தி திரும்ப செல்லும்போது விமான நிலையத்தில் அவருக்கு சால்வை அணிவித்தனர். காலாப்பட்டு-ஷாஜகான் உழவர்கரை- சிவசங்கரன், ராஜ்பவன்-குமரன் திருபுவனை-வேலு மங்கலம் ரகுபதி ஆகியோர் ராகுல் காந்தியை விமான நிலையத்தில் தனியாக சந்தித்து பேசினார்கள்.
இவர்கள் திமுக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவதால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் கடும் குழப்பம் நீடித்தது. அவர்களுக்காக காங்கிரசார் யாரும் ஓட்டு கேட்கக்கூடாது. தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என புதுச்சேரி காங்கிரஸ் உத்தரவிட்ட நிலையில் ராகுல் காந்தி விமான நிலையத்தில் அவர்களை சந்தித்து இருப்பது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.