புதுச்சேரி

இந்திய அளவில் தற்கொலை சம்பவங்களில் 7-வது இடத்தை பிடித்த புதுச்சேரி

கடந்த 2024-ம் ஆண்டு 1 லட்சத்து 70 ஆயிரத்து 746 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் காவல் துறை மூலம் பதிவு செய்யப்பட்ட தற்கொலை வழக்குகளின் தரவுகளை சேகரித்து, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக வெளியிடுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு லட்சம் மக்கள்தொகையில், எத்தனை சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்ற அடிப்படையில் இப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி கடந்த 2024-ம் ஆண்டுக்கான தற்கொலை வழக்குகளின் தரவுகள், தற்போது வெளியாகி உள்ளது. அதில் கடந்த 2024-ம் ஆண்டு 1 லட்சத்து 70 ஆயிரத்து 746 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

குறிப்பாக 14 ஆயிரத்து 488 பேர் மாணவர்களும், இதில் 18 முதல் 30 வயது வரை 56,495 பேரும், 30 முதல் 45 வயது வரை 54,932 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் கடந்த 2017-ல் முதல் இடமும், 2018-ல் 2-வது இடமும், 2019-ல் 3-வது இடமும், 2020-ல் 4-வது இடமும், 2021-ல் 3-வது இடமும், 2022-ல் 3-வது இடமும், 2023-ல் 4-வது இடம் பிடித்தது. கடந்த 2024-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலம் தற்கொலைகள் குறைந்து 7-வது இடம் பிடித்துள்ளது.

அதில் 2024-ம் ஆண்டு மட்டும் குடும்ப பிரச்னையில் ஆண்கள் - 132, பெண்கள்- 30, 3-ம் பாலினம்-1 என மொத்தமாக 163 பேரும், உடல்நிலை சரியில்லாமல் ஆண்-45, பெண்-17 என மொத்தமாக 62 பேரும், போதை பொருளுக்கு 6 பேரும், காதல் பிரச்சனைக்கு ஒருவரும், மற்ற காரணங்களுக்காக 154 பேரும், காரணம் தெரியாதது 51 பேரும் என மொத்தமாக 437 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவை கடந்த 2023-ம் ஆண்டை விட 6 சதவீதம் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலையில் அதிகபட்சமாக தூக்கு போட்டு 333 பேரும், விஷம் குடித்து 57 பேரும், தீயிட்டு தற்கொலை 7 பேரும், மற்ற காரணங்களாக 35 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இதில், விவசாயிகள் 33 பேரும், தினக்கூலி ஊழியர்கள் 160 பேர் தற்கொலை செய்துள்ளனர். மேலும், படிக்க தெரியாதவர்கள் 30 பேரும், 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள் 120 பேரும், 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் 91 பேரும், பட்டப்படிப்பு படித்த 24 பேரும், மாணவர்கள் 16 பேரும் அடங்குவர்.