புதுச்சேரியில் நல்லவாடு, வீராம்பட்டினம், தேங்காய்திட்டு, வைத்திக்குப்பம், சின்னமுதலியார்சாவடி, காலாப்பட்டு உள்ளிட்ட 18 கடற்கரை கிராமங்கள் உள்ளன. அங்கிருந்து தினமும் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் சென்னையிலிருந்து கோடியக்கரை வரையுள்ள கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக அவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் நவீன ரோந்து கப்பல்களை பயன்படுத்தி வருகின்றனர். நடுக்கடலில் எல்லை தாண்டி வரும் கப்பல்கள், படகுகளை கண்காணிப்பது, மீனவர்கள் தாக்கப்படுவதை கண்காணித்து பாதுகாப்பு கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுச்சேரி கடல் பகுதிகளை கண்காணிக்க சென்னையில் இருந்து நவீன ரோந்து கப்பலில் கடற்படை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் புதுச்சேரி காந்திசிலை பகுதியில் சுமார் 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் ரோந்து கப்பலை நிறுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதனை செல்போனில் படம் எடுத்து வியந்தனர்.