புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா காக்கிநாடா அருகே உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏனாம் பிராந்தியத்திலிருந்து என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட்டு மல்லாடி கிருஷ்ணாராவ் வென்றார். இவர் கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியோடு புதுச்சேரியில் அமைச்சராக பதவியேற்றார். இதுவரை இலாக்கா ஒதுக்கப்படவில்லை,
இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்ற பின்பு மல்லாடி கிருஷ்ணாராவ் தனது தொகுதியான ஏனாமுக்கு இன்று சென்றார். அவர் ராஜமுந்திரியிலிருந்து ஹெலிகாப்டரில் ஏனாம் சென்றார். ஏனாம் பெரிய ரோட்டில் தற்காலிக ஹெலிகாப்டர் தளத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இறங்கினார்.
அங்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். கிரேனில் மூலம் பிரமாண்ட மாலையை அவருக்கு அணிவித்தனர். தொடர்ந்து அருகில் உள்ள கோதாவரி ஆற்றில் படகுகளில் கொடிகளோடு வந்து வரவேற்றனர்.
முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து சால்வை தந்து வாழ்த்தினர். தொடர்ந்து திறந்த ஜீப்பில் ஏனாம் முழுவதும் ஊர்வலமாக அழைத்தும் சென்றனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஏனாம் தொகுதியில் 1996 முதல் 2016 வரை தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 2026ல் மீண்டும் போட்டியிட்டு 6வது முறையாக வெற்றி பெற்றார். தற்போது 4-வது முறையாக அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.