புதுச்சேரி

வேலை தருவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை- தனியார் நிறுவன உரிமையாளர் கைது

பணத்தை பெற்ற பின் லட்சுமிகாந்தனை அந்த பெண் தொடர்பு கொண்டும், பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்ததோடு பணத்தையும் தரவில்லை.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 40 வயது பெண், தனக்கு அறிமுகமான நபரிடம் வேலை கேட்டுள்ளார்.

அவர் புதுவை அடுத்த கிருமாம்பாக்கத்தில் 'டோனக்ஸ்' இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வரும், கடலூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது 40) என்பவரை தொடர்பு கொள்ளும்படி கூறினார்.

அந்த பெண், லட்சுமிகாந்தனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தனது நிறுவனத்தில் தனி செயலர் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்குவதாக கூறினார்.

அதை நம்பிய அப்பெண் கடந்த மே மாதம் 20-ந்தேதி புதுச்சேரி வந்தார். அந்த பெண்ணை, லட்சுமிகாந்தன் அழைத்து சென்று கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்க வைத்தார். தனது நிறுவன ஊழியர்கள் தங்கும் இடம் என்றும், தற்போது நிறுவனத்தில் கட்டுமான வேலை நடப்பதால், ஒரு வாரம் கழித்து வந்து வேலையில் சேரலாம் என கூறிவிட்டு சென்றார்.

மிரட்டல்

கடந்த மே 25ந் தேதி கேரள பெண் தங்கியிருந்த இடத்துக்கு வந்த லட்சுமிகாந்தன், தனக்கு அவசரமாக, ரூ.10 லட்சம் தேவைப்படுகிறது, ஏற்பாடு செய்தால், ஓரிரு நாளில் திருப்பி கொடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த பெண், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 5 லட்சத்தை லட்சுமிகாந்தனுக்கு அனுப்பி உள்ளார்.

பணத்தை பெற்ற பின் லட்சுமிகாந்தனை அந்த பெண் தொடர்பு கொண்டும், பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்ததோடு பணத்தையும் தரவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் முதல் வாரம் கேரள பெண் தங்கியிருந்த அறைக்கு வந்த லட்சுமிகாந்தன், அந்த பெண்ணை கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்ஐ சண்முக சத்தியா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, லட்சுமிகாந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.