புதுச்சேரியில் ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன் என 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 13-ந் தேதி பதவியேற்றார். அவருடன் பா.ஜ.க.வை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து புதிய அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பா.ஜ.க.வை சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திரிபுரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், புதுச்சேரி கவர்னர் அனுப்பிய புதிய அமைச்சர்கள் கோப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அந்த கோப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 புதிய அமைச்சர்களுக்கு நேற்று இரவு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெற வாய்ப்பு உள்ளது.