புதுச்சேரி

வெளிமாநில சுற்றுலா வாகனங்களை குறி வைத்து அபராதம் விதிக்கும் போலீசார்

ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும்.

Maalaimalar

புதுச்சேரி:

புதுச்சேரியின் மாநில வருவாய் சுற்றுலா துறையை நம்பி உள்ளது.

வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்தால் தான் வியாபாரம் அதிகரிக்கும். தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்ட், மதுபான விற்பனை அனைத்தும் வெளிமாநில சுற்றுலா பயணிகளையே நம்பி உள்ளது.

தற்போது கோடை விடுமுறையொட்டி, புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

அப்படி வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

குறிப்பாக சிக்னல்களில் நிற்கும் போக்குவரத்து போலீசார், சிக்னலை கடக்க வரும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில கார்களை உடனே நிறுத்தி விடுகின்றனர். அவர்களிடம், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் ஆவணங்களை கேட்கின்றனர்.

அனைத்தும் இருந்தாலும் கூட, ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.

அதேபோன்று, கடலுார் சாலையில் மாநில எல்லையான முள்ளோடையில், வாகன சோதனை என்ற பெயரில் புதுச்சேரி போலீசார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் நிறுத்தி சோதனை நடத்தி அபராதம் விதித்தும் வருகின்றனர்.

போக்குவரத்து சட்டப்படி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பது தவறில்லை.

ஆனால், வெளி மாநில வாகனங்களை மட்டும் குறி வைத்து அபராதம் விதிப்பதும், அவர்களை விரட்டுவதும், புதுச்சேரி அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்தும்.

சுற்றுலா பயணிகளின் வருகையும் குறையும். எனவே, போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசா ருக்கு வழங்க வேண்டும் என வெளிமாநில சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.