துப்புரவு தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.4 ஆயிரம் உயர்த்த புதுவை அரசின் உள்ளாட்சித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவை, உழவர்கரை நகராட்சிகளில் கிரீன் வாரியர்ஸ் நிறுவனமும், கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் காரைக்காலில் எச்.ஆர். ஸ்கொயர் நிறுவனமும் துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.8 ஆயிரத்து 806 நிர்ணயித்து அதில் பிடிப்புப் போக ரூ.8 ஆயிரம் மட்டும் கிடைத்து வந்தது. அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டுமென்று எங்கள் சார்பில் கடந்த 10 மாதமாக கோரிக்கை வைத்தோம்.
இந்த நிலையில் உள்ளாட்சித்துறை இயக்குநர் அலுவலகம் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் சம்பளம் சுமார் ரூ.4 ஆயிரம் உயர்வுடன் மற்ற கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.12 ஆயிரத்து 726 பிடித்தம் போக ரூ.11 ஆயிரம் கிடைக்கும். மாதந்தோறும் 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
ஒரு நாள் வார விடுமுறை சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும். தேசிய விடுமுறை நாள்களில் வேலை செய்தால் இரட்டை சம்பளம் வழங்க வேண்டும். பி.எப். மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் செலுத்த வேண்டும். மாத சம்பள ரசீது கொடுக்க வேண்டும்.
இந்த மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வர வேண்டும் என்று இந்த 2 ஒப்பந்ததாரர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.