தியான பீடத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெங்களூரூ பிடதியில் கடந்த 2003-ம் ஆண்டு ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தவர் நித்யானந்தா சுவாமிகள்.
இவருக்கு தமிழகத்தில் திருவண்ணாமலை, ராஜபாளையம், புதுச்சேரி ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆசிரமம் உள்ளது. பெங்களூரு ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக புகார் கடந்த 2018-ல் புகார் எழுந்தது.
இதனையடுத்து நித்யானந்தா மீது பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பெங்களூரு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில நித்யானந்தா மாயமானார்.
இதனால் தேடப்படும் குற்றவாளியாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை நித்யானந்தா உருவாக்கினார். இவர் மீது வழக்குகள் உள்ளதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை.
இதனிடையே புதுச்சேரியை அடுத்த ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தா தியான பீடத்திற்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
அப்போது தியான பீடத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசி வருகிறோம். நித்யானந்தா புதுச்சேரிக்கு வரும் போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் முதல்-மந்திரி ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை கேட்ட முதல்-மந்திரி ரங்கசாமி, 'சரி... அவர் வரட்டும்... பார்த்துக் கொள்ளலாம்...' என்று தெரிவித்தார். தொடர்ந்து முதல்-மந்திரி ரங்கசாமிக்கு கைலாசாவின் சிறப்புகள் அடங்கிய புத்தகத்தையும் தியான பீட நிர்வாகிகள் வழங்கினர். நித்யானந்தா புதுச்சேரிக்கு வர இருப்பதாக தியான பீட நிர்வாகிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.