புதுச்சேரி

முதல்-அமைச்சர் ஆதங்கம் எதிரொலி: அரசு துறைகளில் கோப்புகள் தாமதம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட நிதிதுறை

புதுவை அரசின் நிதித்துறை செயலர் அனைத்து துறை செயலர்கள் மற்றும் இயக்குனர்களை அழைத்து எந்தந்த துறைகளில் எந்தந்த கோப்புகள், எதனால் நிலுவையில் உள்ளது என விசாரணை நடத்தினார்.

புதுவை திருபுவனை தொகுதி தவெக எம்எல்ஏ சாய்சரவணன்குமார் சட்டசபையில், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, மாநிலங்களின் நிலை வேறு, புதுவையின் நிலை வேறு. இங்கு எல்லாமே கவர்னர் தான். எந்த கோப்பு அனுப்பினாலும், சுற்றி, சுற்றி குறி போட்டு திரும்பி எனக்கே வருகிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எல்லாம் என்ஜாய் பண்ணத்தான் புதுவைக்கு வருகின்றனர் என ஆதங்கப்பட்டார். இந்த தகவல்கள் சமூகவலைதளங்கில் வைரலானது.

இதையடுத்து புதுவை அரசின் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் மோகன் உப்பு அனைத்து துறை செயலர்கள் மற்றும் இயக்குனர்களை அழைத்து எந்தந்த துறைகளில் எந்தந்த கோப்புகள், எதனால் நிலுவையில் உள்ளது என விசாரணை நடத்தினார். ஒவ்வொரு துறையிலும் கோப்புகள் கீழ் மட்டத்திலேயே நிலுவையில் இருப்பது உறுதியானது.

கல்வித்துறையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நோட்டு, புத்தகம், டைரி, அடையாள அட்டை, சீருடை , புத்தகப்பை போன்ற நலத்திட்டங்களுக்கான கொள்முதல் கோப்புகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எல்டிசி, யூடிசி பணியிடங்களில் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதால், கோப்புகள் தயாரிப்பதில் தாமதமாவதோடு, தவறுகள் ஏற்பட்டு பல்வேறு நிலைகளில் அதிகாரிகளால் விளக்கம் கேட்டு தேக்கமடைவது தெரிய வந்தது.

இதனையடுத்தூ நிதித்துறை செயலர், அனைத்து கொள்முதல் கோப்புகளையும் விரைவாக பரிந்துரை செய்யவும், சந்தேகம் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரியோடு நேரில் சந்தித்து விளக்கம் பெற்று கோப்புகளை விரைவாக அனுப்பவும் உத்தரவிட்டார்.