புதுச்சேரி

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு

"இந்த முடிவு ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கூடுதல் நிதி ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது"

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, மே 13, 2026 அன்று புதுச்சேரி மாநிலத்தின் 16-வது முதல்-அமைச்சராக 5வது முறையாகப் பதவியேற்றார். அவரது தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஒரு மாதத்திற்கு பிறகு, புதுச்சேரி அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படுவதற்கு ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம், தற்போது வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 21 முதல் 55 வயது வரையிலான 64,450 குடும்பத் தலைவிகள் பயனடைய உள்ளனர்.

திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.16.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவித்தொகை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த முடிவு ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கூடுதல் நிதி ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.