கோப்பு படம். 
புதுச்சேரி

சுழற்சி முறையில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்-கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. யோசனை

புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தமிழகத்தில் இதற்காக மத்திய அரசு நிதி அளிக்கிறது. சமுதாய கூடங்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் நிர்வகிக்க ஏற்பாடு செய்யலாம்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தமிழகத்தில் இதற்காக மத்திய அரசு நிதி அளிக்கிறது. புதுவைக்கு ஏன் நிதி வழங்கவில்லை. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

புதுவையின் ஒவ்வொரு பகுதியிலும் சமுதாய கூடம் உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அதில் உள் கட்டமைப்பு வசதி இல்லை. சமுதாய கூடங்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் நிர்வகிக்க ஏற்பாடு செய்யலாம். சமுதாய கூடத்தை தரம் உயர்த்தி திருமண மண்டபங்களாக மாற்றலாம்.

கிழக்கு கடற்கரை மீன் அங்காடியில் காலாப்பட்டு மீனவர்களுக்கு இடம் ஒதுக்கி தரப்படவில்லை. அவர்களுக்கு நவீன மீன் மார்க்கெட்டில் இடம் கொடுங்கள் இல்லையென்றால் புதிதாக ஒரு மார்க்கெட் கட்டி கொடுக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கீழ் 3 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் பட்டா, பட்டா மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சட்டமன்றத்தை தவிர வேறு அனைத்தையும் பதிவு செய்து தரும் நிலையில் பத்திரப்பதிவு துறை உள்ளது. பத்திரப்பதிவு துறையில் பணியில் உள்ளவர்களை சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். ஆன்லைன் பட்டா மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கல்யாணசுந்தரம் பேசினார்.