புதுச்சேரி

ஓட்டு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு- தேர்தல் அதிகாரி ஆய்வு

வரும் 4-ந்தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுவை சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது.

ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, மகளிர் பொறியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் துணை ராணுவம் மற்றும் போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறையினர் மற்றும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரிகள் தினசரி இதை ஆய்வு செய்கின்றனர்.

இந்த 3 மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் 4-ந்தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஓட்டு எண்ணும் பணிக்கு, அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனித்தனியே வழி ஏற்படுத்தவும், பேரிகார்டு அமைக்கவும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் 3 மையங்களில் சாமியானா பந்தல், குடிநீர் வசதி ஏற்படுத்திடவும் ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது சீனியர் எஸ்.பி., கலைவாணன், கூடுதல் கலெக்டர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.