புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் துறை முகத்தின் செயல்பாடுகளை புதுவை அரசு கண்காணிக்க தவறியதால் கடத்தல் கேந்திரமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. காரைக்கால் துறை முகத்தில் அளவுக்கு அதிகமாக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு டன் கணக்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
காற்றின் மூலம் பரவும் கரி துகள்களால் காரைக்கால் மாவட்டமே நச்சுத்தன்மையாக மாறியுள்ளது. உணவுப் பொருட்களிலும் கரி துகள்கள் கலப்பதால் அதை உட்கொள்ளும் மக்கள் பலவித நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முதியவர்கள், குழந்தைகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
துறைமுகத்தின் செயல்பாடுக்கு எதிராக காரைக்கால் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்களை ஆட்சியாளர்களின் தூண்டுதலால் போலீசார் மிரட்டுவது கண்டனத்திற்குரியது.
காரைக்கால் துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படு வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை உடனடி யாக புதுவை அரசு கையகப்படுத்த வேண்டும். அரசே துறைமுகத்தை நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.