புதுச்சேரி

மணக்குள விநாயகருக்கு தங்க கவச அலங்காரத்தில் அமெரிக்க வைர கிரீடம் அணிவிப்பு

உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

மாலை மலர்

புதுச்சேரி:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.