புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையிலிருந்து டூப்ளே சிலை வரையிலான 1 1/2 கி.மீ. அழகிய கடற்கரை சாலை புரமனேடு பீச் என அழைக்கப்படுகிறது.
கடற்கரை சாலையில் தலைமை செயலகம், பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடம், கார்கில் நினைவிடம், அம்பேத்கர் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், சுங்கத்துறை அலுவலகம் என அழகிய கட்டிடங்கள், நினைவிடங்கள் உள்ளது.
இந்த கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்து தருவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டின் நோக்கமாகும்.
ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோர் இந்த சாலையை பயன்படுத்தலாம். நடனம், நாட்டியம், ஓவியம், வேடிக்கை, விளையாட்டு என எதில் தனி திறமை இருந்தாலும், குழு திறமை இருந்தாலும் மக்கள் முன்பு வெளிப்படுத்தலாம்.
பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி தரப்படும். அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். வெளி நாடுகளில் உள்ளதுபோல புதுவை கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற சுற்றுலாத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.