புதுச்சேரி

அடுத்த வாரம் புதிய அமைச்சர்கள் நியமனம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்

காரைக்காலுக்கு உரிய காவிரி நீர் கிடைக்க எப்போதும் புதுவை அரசு வலியுறுத்தும். காவிரி நீரை கேட்டு பெறுவோம். தமிழக அரசிடமும் கேட்போம்.

புதுவை மாநில அமைச்சராக கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியோடு என்ஆர் காங்கிரஸ் ஏனாம் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி ஏற்றார்.

அதனை தொடர்ந்து 16 நாட்களுக்கு பிறகு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டமன்றத்தில் அறையில் பொறுப்பேற்றார். அவரை இருக்கையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், என்ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர்கள் இலாக்கா ஒதுக்காததால் அரசு பணிகள் ஏதும் முடக்கப்படவில்லை. அனைத்து பணிகளும் நடக்கிறது. தினமும் 20 கோப்புகளில் கையெழுத்திட்டு அனுப்புகிறேன். அடுத்த வாரத்தில் அமைச்சர்கள் நியமனம் இருக்கலாம். விரைவில் சபாநாயகர் யார் என்பது தெரியும்.

பிரெஞ்சு மொழி பள்ளிகளில் நீடிக்க மத்திய அரசை கேட்டுள்ளேன். மீண்டும் வலியுறுத்துவேன். காரைக்காலுக்கு உரிய காவிரி நீர் கிடைக்க எப்போதும் புதுவை அரசு வலியுறுத்தும். காவிரி நீரை கேட்டு பெறுவோம். தமிழக அரசிடமும் கேட்போம். அவர்களும் தருவார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் உரிய பங்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.