புதுச்சேரி:
உலக புற்றுநோய் தினம் வருகிற 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
உழவர்கரை நகராட்சி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு புற்று நோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய சீருடைகள் வழங்கப்பட்டது.
பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சீருடைகளை வழங்கி பேசும்போது, புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் முக்கியம். நகராட்சி பணியாளர்களின் பங்கு இதில் இன்றியமையாதது. அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிந்தால் அதை ஒழிக்கலாம். 30 வயதை கடந்த இருபாலினரும் புற்றுநோய் சோதனை செய்ய வேண்டும். வாய், மார்பகம், கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர்கள் முரளி, ரகுநாதன், நோடல் அதிகாரி ரமேஷ், சித்ராதேவி, திட்ட அதிகாரி துரைசாமி, நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.