தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமி மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகளுக்கான தேர்வுகளை நடத்த புதுச்சேரியை ஒரு மையமாக மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுத்துள்ளது.
இதையொட்டி புதுச்சேரியில் ஒருங்கிணைந்த ராணுவ சேவைக்கான தேர்வு கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 3 பிரிவுகளாக நடக்கிறது. இதில் 140 தேர்வர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமிக்கான தேர்வு அன்றைய தினம் காலை 10 முதல் 2 பிரிவுகளாக நடக்கிறது. இதில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 277 தேர்வர்களுக்கும், லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 195 தேர்வர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 612 தேர்வர்கள் புதுச்சேரியை மையமாகத் தேர்வு செய்துள்ளனர்.
தேர்வை நடத்த புதுச்சேரி அரசு பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அன்றைய தினம் தேர்வர்களுக்காக புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் சிறப்புப் பஸ் இந்த மையங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும் தேர்வு முடிந்து திரும்பும் போதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக இத்தேர்வு மையங்கள் மூடப்படும். அதன் பிறகு வந்து சேரும் தேர்வர்களுக்கு அனுமதியில்லை.
இந்த தகவலை புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் சார்புச் செயலர் எஸ். முருகேசன் தெரிவித்துள்ளார்.