புதுச்சேரி போக்குவரத்து போலீசார் கடந்த சில நாள்களாக போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து உடனடி அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் முருங்கப்பாக்கம் மேம்பாலம் அருகே போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பஸ்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் இருக்கிறதா.? என சோதனை நடத்தினர். இதில் 10 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன் அகற்றப்பட்டது. மேலும் இந்த காற்று ஒலிப்பான் பயன்படுத்தியதாக அந்த பஸ்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தவிர செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டியது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தது உள்ளிட்டோரும் சிக்கினர். இதில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்த சோதனை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் கூறினர்.