புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் உடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
இதற்கிடையில் நேற்று புதுச்சேரி மாநில முதல்வரும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கலின்போது, சொத்து மதிப்பு குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் 27.99 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
12 கிராம் தங்கம் மோதிரம் ஒன்று, 12 கிராம் எடையுள்ள முத்துமாலை, இரண்டு மோட்டார் சைக்கிள், இரண்டு கார் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றின் மதிப்பு 21.25 லட்சம் ரூபாய் ஆகும்.
கமர்ஷியல் மற்றும் விவசாய நிலம் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தட்டாஞ்சாவடியில் மார்க்கெட் விலையில் 8 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயம் அல்லாத நிலமும், 25 ஆயிரம் சதுர அடி மற்றும் 40 ஆயிரம் சதுர அடியில் இரண்டு வீடுகளும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவை பாரம்பரிய சொத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
28 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட நபர் ஒருவருக்கு 30 லட்சம் ரூபாயும், மற்றொருவருக்கு 5 லட்சம் ரூபாயும் கடன் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.