புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் மே 4-ந்தேதி நடக்கிறது.
தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒருபகுதியாக கடந்த 7-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபானம், சாராயக்கடைகள் மூடப்பட்டன.
அதன்படி புதுச்சேரியில் உள்ள 443 மதுக்கடைகள், 83 சாராயக் கடைகள், 37 மதுபான குடோன்கள் மூடப்பட்டன. இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், சாராயக்கடைகளும் மூடப்பட்டன.
புதுச்சேரியிரில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் எல்லையோர கிராமங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர். அங்கு மதுபானம் வாங்கி குடித்தனர். இதனால் தமிழக பகுதி மதுக்கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது.
இதற்கிடையே புதுச்சேரியில் கடந்த 3 நாட்களில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்றதாக 10 நபர்களுக்கு ரூ.45 ஆயிரம் கலால் துறையால் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 114 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் 3 நாட்களுக்கு பின் நேற்று புதுச்சேரியில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு மதுபிரியர்கள் உற்சாகத்துடன் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை காண முடிந்தது.