புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் திருமலைராஜன் ஆறு, நூலாறு, அரசலாறு, நாட்டாறு, முல்லையாறு, பிரவிடையான் ஆறு, வாஞ்சி ஆறு ஆகிய காவிரி கிளை ஆறுகள் பாய்கின்றன.
இவற்றில் திருமாலை ராஜன், அரசலாறு ஆகியவற்றில் மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற ஆறுகளில் தண்ணீர் வரவில்லை.
தமிழக எல்லைப் பகுதியான காவிரி கடைமடைப் பகுதியில் அந்த மாநில அரசால் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம்.
காரைக்கால் பகுதி ஆறுகளில் ரூ.60 லட்சத்தில் தூர் வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் பகுதியில் சம்பா சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
புதுவை அரசு வசம் 100 டன் விதைகள் தயார் நிலையில் உள்ளது. அதுபோல 150 டன் உரங்களும், பாட்கோ, பஜன்கோ நிறுவனங்களில் தயார் நிலையில் உள்ளன.
எனவே, புதுவை விவசாயிகள் விதைகள், உரங்களுக்காக தமிழகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை இந்த ஆண்டு இருக்காது. உரத்தை மானிய விலையில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அது போல வேளாண் சாகுபடிக்குத் தேவையான பூச்சி மருந்துகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.