செய்திகள்

மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் மீன்பிடி தடை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதற்கு ஏற்றாற்போல் நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-

புதுவையில் வழக்கமாக 45 நாட்கள் மீன் பிடி தடைகாலமாக அறிவிக்கப்படும். ஆனால் தற்போது 61 நாட்களாக மீன்பிடி தடைகாலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மீன்பிடி தடைகாலத்திற்கு அரசு ரூ.4 ஆயிரம் நிவாரணமாக வழங்கும். ஒருநாளைக்கு ரூ.200 என கணக்கிட்டாலும் 61 நாட்களுக்கு ரூ.12 ஆயிரம் மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.

கடந்த காலத்தைபோல ரூ.4 ஆயிரம் தராமல், கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். துறைமுக முகத்துவாரத்தை தூர்வாராததால் கடந்த 6 மாதமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கந்தசாமியே தெரிவித்துள்ளார். இதற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதனால் மீனவர்கள் நிவாரணத்தை எதிர் பார்த்துள்ளனர். மீனவர்கள் மறியல் செய்யப்போவதாக தெரிவித்தனர். ஆனால் சட்டசபை நடப்பதால் உரிய அறிவிப்பு கிடைக்கும் என அமைதி காத்துள்ளனர். எனவே, அரசு இந்த நிவாரணங்களை அறிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-

வழக்கமான மீன்பிடி தடைகாலத்தை விட கூடுதலாக 15 நாட்கள் தடை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி கொடுப்போம். துறைமுகம் தூர் வாராததால் ஏற்பட்ட பாதிப்பிற்கும் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இதுகுறித்து அமைச்சரவையில் பேசி முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.