கோப்புபடம் 
செய்திகள்

உடுமலை ஊராட்சிகளில் பொது கழிப்பிடம்-அதிகாரிகள் ஆய்வு

சமீபத்தில் 6 வெவ்வேறு இடங்களில் தலா ரூ.5.35 லட்சம் மதிப்பில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாலை மலர்

உடுமலை:

உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. அதன்படி  ஒவ்வொரு கிராமத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். பல கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக்கழிப்பிட வசதிகள் செய்து தரப்படவில்லை.

இதனால் சாலையின்  ஓரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சில கிராமங்களுக்கு செல்லும் மக்கள் இந்த கழிப்பிடப்பகுதியை கடந்தே செல்ல வேண்டியுள்ளது. திறந்த வெளிக்கழிப்பிடம் பயன்படுத்தக்கூடாது என்று அரசு பல லட்சம் ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்து வருகிறது.

இருப்பினும் கிராமங்களில் அனைத்து குடியிருப்புகளிலும் கழிப்பிட வசதியுடன் வீடுகள் இல்லை. இதனால்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில்6 வெவ்வேறு இடங்களில் தலா ரூ. 5.35 லட்சம் மதிப்பில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுக்கழிப்பிடம் தேவையான இடங்களை கண்டறிந்து, அங்கு கட்டுமானம் தொடங்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ‘திறந்த வெளிக்கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் கிராமங்களில் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதனால் தேவைப்படும் ஊராட்சிகளில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடம் அமைக்கப்படுகிறது என்றனர்.