பல்லடம் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்த போது எடுத்த படம். 
செய்திகள்

கோவில் பராமரிப்பு செலவுக்கு நிதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை

இந்து அறநிலையத்துறை சார்பில் ஒரு கால பூஜைக்கு தரப்பட்ட ஆயிரம் ரூபாயை தற்போது ரூ.750ஆக குறைத்து விட்டனர்.

மாலை மலர்

பல்லடம்:

பல்லடம் இந்து அறநிலைத்துறை அலுவலர் சண்முகசுந்தரத்திடம் நொச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் அருகே உள்ள நொச்சிபாளையம் கிராமத்தில் கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. இந்த  கோவிலுக்கு சுமார் 9 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்து வந்தது. அதில் இந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.

குத்தகைப்பணத்தில் கோவிலுக்கான பூஜை செலவுகள், பூசாரி சம்பளம், திருவிழா செலவுகள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த 2019ல் இந்து அறநிலையத்துறை அலுவலகம் மூலம் தமிழ்நாடு காவல்துறைக்கு 5.026 ஏக்கர் நிலம் ரூ.3கோடியே14லட்சத்து12ஆயிரத்து500க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் உரிமை சட்டத்தில் விபரம் கேட்ட போது தெரியவருகிறது.

இந்த நிலையில் காவல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் போக மீதமுள்ள நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு பாசனத்திற்கு தண்ணீர் உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லாததால் யாரும் குத்தகைக்கு எடுப்பதில்லை. இதனால் கோவிலுக்கு சரிவர பூஜைகள் நடப்பதற்கும் விழாக்கள் நடத்துவதற்கும் போதுமான நிதி வசதி இல்லை.

இந்து அறநிலையத்துறை சார்பில் ஒரு கால பூஜைக்கு தரப்பட்ட ஆயிரம் ரூபாயை தற்போது ரூ.750ஆக குறைத்து விட்டனர். இதனால் பொது மக்களின் பங்களிப்பை நம்பியே கோவில் பூஜை நடைபெற்று வருகிறது.

எனவே கோவில் நிலத்தை விற்பனை செய்ததற்கான ரூ.3 கோடியின் வட்டித்தொகையிலிருந்து கோவிலுக்கான பூஜை செலவு, விழாக்கள் செலவு, பராமரிப்பு செலவு உள்ளிட்டவை குறித்து விபரப்பட்டியல் தந்துள்ளோம். இதன்படி வருடத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் கோவிலுக்கு செலவாகிறது.

இதனை இந்து அறநிலையத்துறை நிர்வாகம் கருப்பராயன் கோவிலில் சிறப்புடன் பூஜை மற்றும் விழாக்கள் நடைபெற நிதியுதவி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.