கோவில்பட்டி:
கோவில்பட்டி 9, 10-வது வார்டு வள்ளுவர் நகர் கிழக்கு, மேற்கு பகுதி, 7, 8-வது வார்டு புதுக்கிராமம் வடக்கு, தெற்கு பகுதியில் உள்ள தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்க குழிகள் தோண்டப்பட்டதால் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது.
எனவே இப்பகுதிகளில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரி அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காயம் அடைந்தவர்கள் போல் கட்டு போட்டு நூதன போராட்டம் நடந்தது. கிளை செயலாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார். நகர தலைவி விஜயலட்சுமி, செயலாளர் மலர்விழி, உமா, கிளை செயலாளர்கள் கல்யாணி, மரிய சகாயராணி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமாசங்கர், மாற்று திறனாளி மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.