அம்மா உணவகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 
செய்திகள்

ஈஞ்சம்பாக்கத்தில் அம்மா உணவகத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஈஞ்சம்பாக்கத்தில் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #AmmaUnavagam

மாலை மலர்

சோழிங்கநல்லூர்:

நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் இருப்பதாகவும் இதனால் பறவைகள் பாதிக்கப்படுவதாகவும் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ‘அம்மா’ உணவகத்தை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இன்று காலை அங்கு வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர், தே.மு.தி.க.வினர் ஏராளமானோர் திரண்டனர்.

அவர்கள் உணவகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

நீலாங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #AmmaUnavagam