போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றும் காட்சி 
செய்திகள்

டெல்லி ஜாமியா துப்பாக்கி சூடு- போலீஸ் தலைமையகம் அருகே தர்ணா போராட்டம்

டெல்லி ஜாமியா பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து போலீஸ் தலைமையகம் அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக புதுடெல்லி உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். 

அப்போது போராட்ட கூட்டத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கு கூடியிருந்த மாணவர்கள், பொதுமக்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். மர்ம நபர் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு மாணவர் காயமடைந்தார். 

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதனால் ஜாமியா பல்கலைக்கழக பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டை கண்டித்து டெல்லியில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே இன்று சிலர் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.