செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டக்காரளுக்கு நிறுவனத்துக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து, லண்டனில் உள்ள உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் நடைபெற்றது. #Sterliteprotest#BanSterlite #policefiring

லண்டன்:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து லண்டனில் உள்ள உரிமையாளர் வீட்டில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் வீடு அமைந்துள்ளது. தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அனில் அகர்வால் வீட்டின் முன்பு திரண்டனர். அங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #Sterliteprotest#BanSterlite #policefiring

SCROLL FOR NEXT