செய்திகள்

மும்பை அருகே விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: வாகனங்கள் எரிப்பு - 12 போலீசார் காயம்

மும்பை அருகே விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சில் 12 போலீசார் காயம் அடைந்தனர்.

மும்பை:

மும்பை அருகே விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சில் 12 போலீசார் காயம் அடைந்தனர்.

மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த தானே மாவட்டம் நெவாலி பகுதியில் 1,600 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியும், சுற்றுச்சுவர் எழுப்பும் பணியும் தொடங்கியது.

இந்த நிலத்துக்கு உரிமைகோரும் விவசாயிகள், அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று நெவாலியில் திடீரென போராட்டம் நடத்தினர். சாலையில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கலைந்துபோகும்படி கூறியும் அவர்கள் செல்லவில்லை.

விவசாயிகள் திடீரென போலீசார் மீது கற்களை வீசினர். நிலைமையை சமாளிக்க போலீசார் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில் ஒரு போலீஸ் வேன், 3 லாரிகள், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு டெம்போ ஆகியவை எரிந்து நாசமாயின.

கல்வீச்சில் உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 12 போலீசார் பலத்த காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் 10 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.

இதனிடையே, ராணுவ செய்தித்தொடர்பாளர் நிருபர்களிடம் கூறும்போது, “விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலம் இந்திய கடற்படைக்கு சொந்தமானது. ஆகையால், இந்த நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க இதனை சுற்றிலும் தடுப்புச்சுவரை கடற்படை எழுப்பி வருகிறது” என்றார்.

சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கும் உள்ளது.