செய்திகள்

அரசு அதிகாரிகளை விட அந்த தொழில் செய்பவர்கள் மேல் - பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு

அரசு அதிகாரிகளைவிட பாலியல் தொழில் செய்பவர்கள் மேலானவர்கள் என உத்தரபிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #SurendraSingh #BJP

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அரசு ஊழியர்களை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேசியது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

“அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழில் செய்பவர்கள் எவ்வளவோ மேல். அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வேலையை செய்கிறார்கள். மேடையில் தோன்றி நடனமும் ஆடுகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய பிறகுகூட தங்கள் பணியை செய்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்றார் சுரேந்திரா.

மற்றவர்கள் குறித்து மட்டுமல்லாமல் சொந்த கட்சியினரையும் சுரேந்திர சிங் விட்டு வைப்பதில்லை. சமீபத்தில் உ.பி.யில் நடந்த மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்கு, யோகி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை குறை கூறினார்.