ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. இன்று அரியானா மாநிலம் சோனிபட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன.
நேற்று ( 14-ம் தேதி ) நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரியானா அணி 17-9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. முதல்பாதியின் முடிவில் இரு அணியினருக்கும் 8 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது. இது ஜெய்ப்பூர் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் புள்ளி வித்தியாசத்தை குறைப்பதற்காக ஜெய்ப்பூர் அணி போராடியது. அதன்காரணமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ப்பூர் அணியினர், இரண்டாம் பாதியில் அரியானா அணியினரை விட அதிக புள்ளிகளை எடுத்தனர். ஜெய்ப்பூர் அணியினர் இரண்டாம் பாதியில் 10 புள்ளிகளை விட்டுக்கொடுத்து 18 புள்ளிகள் எடுத்தனர். இதன் காரணமாக 27-27 என்ற மொத்த புள்ளிகள் அடிப்படையில் இந்த போட்டி சமனில் முடிந்தது. ஜெய்ப்பூர் அணியின் நிதின் ராவல் அதிகபட்சமாக 11 தொடுபுள்ளிகள் எடுத்தார்.