செய்திகள்

கல்வி உதவித்தொகை குறைப்பு: 1½ லட்சம் தலித் மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதில் சிக்கல்

அரசு இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை தற்போது குறைத்து உள்ளதால் 1 லட்சத்து 40 ஆயிரம் தலித் கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

தலித் மற்றும் பழங்குடி மக்கள் பள்ளி படிப்பு முடிந்ததும் பொருளாதார பிரச்சினை காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அவர்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டத்தை கொண்டு வந்தார்.

இதன்படி மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும், என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ரூ.85 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் உதவித்தொகை உயர்த்தப்பட்டது.

தற்போது இந்த உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த மருத்துவ கல்லூரி உதவித் தொகை ரூ.4 லட்சமாகவும், ரூ.85 ஆயிரமாக இருந்த என்ஜினீயரிங் உதவித்தொகை ரூ.70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

உதவித்தொகை குறைக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் செமஸ்டர் தேர்வு நடைபெற இருக்கிறது. அதற்கான ஹால்டிக்கெட் வாங்க வேண்டும் என்றால் கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அரசு கல்வி உதவித் தொகையை குறைத்துவிட்டால் பல மாணவர்களால் இந்த கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இவ்வாறு 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் இந்த தேர்வு எழுத முடியுமா? என்ற கலக்கத்தில் உள்ளனர். கூடுதல் கல்வி உதவித் தொகை கிடைக்காவிட்டால் அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும்.

இதுசம்மந்தமாக மாணவர்கள் தரப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் ஆகியவற்றில் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அனைத்து மாணவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபடி உள்ளனர்.

இதற்கிடையே முன்னேறிய இனங்களை சேர்ந்த பலர் தாழ்த்தப்பட்டவர் பிரிவின் சான்றிதழை போலியாக பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் பலர் கல்லூரிகளிலும் இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சீட்டுகளை பெற்று படித்து வருகிறார்கள்.

இவ்வாறு 22 ஆயிரம் பேர் தமிழ்நாடு முழுவதும் போலி ஜாதி சான்றிதழ்களை பெற்று வேலை வாய்ப்பு மற்றும் படிப்பு இடஒதுக்கீடுகளை பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

கோவையில் ஒரே நபர் பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான சான்றிதழ் ஆகிய இரண்டையும் ஒரே தாசில்தாரிடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுக்க மோசடிகள் நடந்துள்ளன.