செய்திகள்

பெரம்பலூரில் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பெரம்பலூரில் 30 கி.மீ. தூர சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் அரிமா சங்கம் சார்பில் நூற்றாண்டு விழா, இந்திய விடுதலை தினவிழா மற்றும் இளையோர் நலன் மேம்பாட்டை வலியுறுத்தும் வகையில் 30 கி.மீ. தூர சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. அரிமா சங்க தலைவர் ஜி.என். ஒஜீர் அகமது பாஷா தலைமை தாங்கினார்.

பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், வேலூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த ஒரு மாணவி உள்பட 240 வீரர்கள் கலந்து கொண்டனர்.

பாலக்கரையில் இருந்து புறப்பட்ட வீரர்கள் குரும்பலூர் வழியாக அம்மாபாளையத்திற்கு சென்று பெரம்பலூர் மேற்கு வானொலித்திடலை வந்தடைந்தனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வீரர் சிவா பந்தய தூரத்தை 54 நிமிடம் 43 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பெற்றார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் ஹரிவிக்னேஷ் 54 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தை பெற்றார். திருச்சி மாவட்டம் லால்குடி புள்ளம்பாடியை சேர்ந்த சிற்றரசன் 3-வது இடத்தையும், அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணனும், திருச்சியை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவும் 4-வது இடத்தை பெற்றனர்.

மேற்கு வானொலித்திடலில் நடந்த நிறைவு விழாவில் அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநர் சேக் தாவூத் வெற்றி பெற்ற வீரர்களுக்குதலா ரூ.10 ஆயிரம், ரூ.6 ஆயிரம், ரூ.4ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள்களை பரிசாக வழங்கினார்.

விழாவில் சாசனத்தலைவர் ராஜாராம், சங்க நிர்வாகிகள் சிங்கப்பூர் ராஜா, என்ஜினீயர் முரளிதரன், ஆனந்த், அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.