ஆற்காடு:
வேலூர் அடுத்த ரத்தினகரியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ, மணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் புதியதாக கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பள்ளி அலுவலகத்தில் ரூ.5 லட்சம் வைத்திருந்தனர்.
மேலும் நேற்று இரவு மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். பள்ளி அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.அங்கிருந்த பீரோவை உடைத்து ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் கொள்ளையடித்த காட்சிகள் பதிவான கண்காணிப்பு கேமராவை உடைத்து சென்று விட்டனர். இன்று காலை வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்ததை கண்டு ஊழியர்கள், ஆசிரியர்கள் திடுக்கிட்டனர்.
மேலும் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து ரத்தினகிரி போலீசில் புகார் செய்தனர். ராணிப்பேட்டை டி.எஸ்.பி. உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பள்ளி அலுவலகத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை சேகரிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews