குன்னத்தூர்:
குன்னத்தூர் அருகே உள்ள ஆதியூர் நிலா வீதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி. தபால் ஊழியர். இவரது மகள் சசிரேகா (வயது 22). பிசியோதெரபி முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சசிரேகா அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
தனது பெற்றோரிடம் சசிரேகா காதலித்த உறவினர் வாலிபரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சசிரேகா சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து விட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சசிரேகா இறந்து விட்டார். இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.