செய்திகள்

கடலூரில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கடலூர்:

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளது. இதில் 2 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அந்த டாக்டர்கள் அனைவரும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அவசர சிகிச்சை, ஆபரே‌ஷன் போன்ற பணிகள் ஆஸ்பத்திரிகளில் நடந்து வருகிறது.

டாக்டர்களின் இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்திய மருத்துவ அசோசியே‌ஷன் சார்பில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயசித்ரா மற்றும் டாக்டர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு கொடுத்தனர். #DoctorsStrike