செய்திகள்

கார் விபத்தில் பெண் காயம் - இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரினார்

கார் விபத்தில் காயம் அடைந்த பெண்ணிடம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் மன்னிப்பு கோரினார். #PrincePhilip #ApologyLetter

லண்டன்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97), ஓட்டி சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார்.

மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக இளவரசர் பிலிப் எழுதிய கடிதத்தில், “விபத்தில் என்னுடைய பங்குக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். விபத்தின் விளைவுகளை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். மோசமான இந்த அனுபவத்தில் இருந்து நீங்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.  #PrincePhilip #ApologyLetter 

SCROLL FOR NEXT