செய்திகள்

சீனப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார்

சீனாவில் இரண்டுநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் புறப்பட்டு இந்தியா வந்தடைந்தார்.#Modi #XiJinping #summit

பீஜிங்:

நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் நான்காவது முறையாக நேற்று முன்தினம் சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி தோக்லாம் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நேற்று வுஹான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என இந்த ஆலோசனையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.அடுத்த 2019-ம் ஆண்டு இதுபோன்ற உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அவர் குறிப்பிட்டபோது சீன அதிபரும் மகிழ்ச்சியுடன் இந்த கருத்தை ஆமோதித்தார்.

இன்று இரண்டாவது நாளாக படகு இல்லத்தில் சவாரி செய்தவாறு இந்தியா- சீனா இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆலோசித்தனர்.

பின்னர், இரண்டுநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் வுஹான் நகரில் இருந்து இந்தியா புறப்பட்டார். அவரை விமான நிலையத்தில் சீன மந்திரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

இந்தியாவுக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #Modi #XiJinping #summit